![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-01-Mar-2024-10-31-AM-8645.jpg)
கோலாலம்பூர், மார்ச் 1 – கடந்த ஆண்டு மொத்தம் 6,394 ஆசிரியர்கள் அதாவது ஒட்டுமொத்தமாக 1.49 சதவீதம் ஆசிரியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 1.23 சதவீதம் அதிகரித்துள்ளதாக துணை கல்வி அமைச்சர் வோங் காஹா வோ தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக கல்வி அமைச்சு 2022ஆம் ஆண்டில் ஆசிரியர்கள் முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கான காரணிகள் மற்றும் ஆசிரியர் தொழிலின் வளர்ச்சி தொடர்பு குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
அதன் அடிப்படையில், நிதி நிலை, ஓய்வூதிய பலன்கள், சுகாதார சிக்கல்கள், கல்விக் கொள்கையில் மாற்றங்கள் மற்றும் கல்வியின் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை காரணங்களாக முன்வைக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
முன்கூட்டியே ஓய்வு பெற விரும்பும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்தும் அதன் தொடர்புடைய காரணங்கள் குறித்தும் கோலா கிரை நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் லத்தீஃப் அப்துல் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு வோங் இவ்வாறு பதிலளித்தார்.