![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-08-Dec-2023-06-54-PM-9346.jpg)
கோலாலம்பூர், டிச 8 – பரோல் உடன்பாட்டில் வெளியான கைதிகளுக்கும் முன்னாள் கைதிகளுக்கும் வேலை வாய்ப்பு மற்றும் அவர்களுக்கு வேலை பயிற்சி வழங்கும் திட்டத்தை சைம் டார்பி (Sime Darby Plantation Berhad) புதுப்பித்துக்கொண்டுள்ளது. முன்னாள் கைதிகள் சமூகத்தோடு ஒன்றித்து வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் இத்திட்டம் இருப்பதாக சைம் டார்பி தோட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ முகமட் ஹெல்மி ஒத்மான் பாஷா தெரிவித்திருக்கிறார். கைதிகள் விடுதலை அனுமதி திடடத்தின் கீழ் சிறைத்துறையுடன் சைம் டார்பி நிறுவனம் ஒத்துழைத்து வருவதாக அவர் கூறினார்.
சிறையில் பரோல் எனப்படும் மன்னிப்பு திட்டத்தின் கீழ் விடுவிக்கப்படுவோரும் முன்னாள் கைதிகளும் தண்டனை காலத்திற்குப் பின் சமூகத்தில் இணைவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். கடந்த கால குற்றச்செயல் பின்னணி அவர்கள் சமூகத்தோடு இணைந்து செயல்படுவதற்கு தடையாக இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் மீண்டும் குற்றச்செயலுக்கே திரும்புவதாக ஹெல்மி சுட்டிக்காட்டினார். முன்னாள் கைதிகள் புதிய வாழ்க்கைக்கு திரும்புவதை சைம் டார்பி நிறுவனம் ஊக்குவிக்கிறது என மாவட்ட பரோல் நிலையத்தை தொடக்கிவைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது அவர் தெரிவித்தார். செம்பனை தோட்டங்களில் வேலை வாய்ப்பு வழங்குவது மற்றும் வேலை தொடர்பான பயிற்சி முன்னாள் கைதிகளுக்கு வழங்கும் திட்டத்தை சைம் டார்பி தோட்ட நிறுவனம் முன்வந்துள்ளது.