![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-09-Nov-2023-11-29-AM-6981.jpg)
சுங்கை சிப்புட், நவ 8 – சுங்கை சிப்புட்டில் சைம் டார்பிக்குச் சொந்தமான கெமரி தோட்டம் மற்றும் சங்காட் சாலாக் தோட்டம் ஆகியவற்றில் பணிபுரிந்த 34 முன்னாள் தோட்ட தொழிலாளர்களுக்கு கோலக்கங்சார் மாவட்டத்திலுள்ள சுங்கை சிப்புட் பத்து சத்து என்னும் இடத்தில் அமைக்கப்படும் சீரான கிராமத் திட்டத்தின்கீழ் ( ஆர்.பி.டி.) அரசாங்க நிலம் வழங்கும் உறுதிக்கடிதங்களை பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் வழங்கினார். பேரா மாநில நில மற்றும் கனிமவளத் துறை இயக்குநர் அலுவலகத்தின் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த உறுதிக் கடிதங்களை அ. சிவநேசன் வழங்கினார். இதன்வழி அந்த தொழிலாளர்களின் 23 ஆண்டு கால போராட்டத்திற்கு ஒரு விடிவு காலம் பிறந்ததாக சிவநேசன் தெரிவித்தார்.
சுமார் மூன்று மாதத்திற்கு முன்புதான் இந்த நில விவகாரம் என் கவனத்திற்கு வந்தது. தீபாவளிக்கு முன்பே நிலத்தைப் பெற்றுதர வேண்டும் என்னும் முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த உறுதிக்கடிதம் அவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பேரா மாநிலத்தில் இந்தியர் நலப் பிரிவு அமைக்கப்பட்டு அதற்கு பொறுப்பாக தாம் இருப்பதாகவும் இம்மாநிலத்தில் இந்தியர்கள் பலர் அரசாங்க நிலங்களில் பட்டா இல்லாமல் வாழ்ந்துவருகிறார்கள். அவர்கள் தம்மை அணுகினால் உதவத் தயாராக இருப்பதாக சிவநேசன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஜாலோங் சட்டமன்ற உறுப்பினர் லோ சீ ஈ மற்றும் தேஜா சட்டமன்ற உறுப்பினர் சண்ட்ரா இங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.