![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-01-Dec-2023-05-34-PM-7128.jpg)
கோலாலம்பூர், டிசம்பர் 1 – ஒரு நாள் திடீரென தனது மே பேங்க் வங்கிக் கணக்கில், 40 கோடி ரிங்கிட் பணம் இருப்பதை கண்டு பெண் ஒருவர் அதிர்ந்துப் போனார்.
மலேசிய மனித வள மன்றத்தின் இயக்குனரும், இணை நிறுவனருமான ஹபிட்சா அப்துல்லா எனும் அப்பெண்ணுக்கு, தாம் ஓர் இரவில் கோடிஸ்வரியாகி இருக்க முடியாது என்பது தெரியும்.
அந்த பணம் குறித்து புகார் அளிப்பதற்கும், முடக்கப்பட்ட தனது வங்கிக் கணக்கை மீண்டும் பெறுவதற்கு அப்பெண் கடினமான, பிரச்சனைக்குரிய வழியை தேர்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
“எனக்கு மறக்க முடியாத வங்கி அனுபவத்தை தந்ததற்கு நன்றி. ஆனால், அதற்கு நான் செலுத்திய விலை கொஞ்சம் அதிகம்” என ஹபிட்சா தனது Linkedln கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவிற்கு கீழ், மே பேங்க் வங்கியின் நிர்வாகத் துணைத் தலைவர் ஷேக் முனீர் அஹ்மாட், ஹபிட்சாவிற்கு உதவுவதற்காக அவரது தொடர்பு எண்ணை தருமாறு கோரி பதிவிட்டிருந்தார்.
எனினும், அவரும் இறுதியில், மே பேங்க் வாடிக்கையாளர் சேவை பிரிவையே ஹபிட்சாவை தொடர்புக் கொள்ள சொன்னதாக கூறப்படுகிறது.
ஹபிட்சாவை போலவே வங்கி அனுபவம் உள்ள இணைய பயனர்கள் சிலர் தொடர்ந்து அவரது பதிவின் கீழ் கருத்துரைத்து வருகின்றனர்.
தமக்கு இதுபோல பிரச்சனை வந்த போது, இரண்டு மாதம் வரை காத்திருக்க நேர்ந்ததாக, ஒருவர் பதிவிட்டுள்ள வேளை ; சிலர் அவ்வளவு பெரிய தொகை கிடைத்ததற்கு ஹபிட்சாவுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.
இந்நிலையில், அவ்விவகாரத்திற்கு தீர்வுக் காணப்பட்டு விட்டதாக, இன்று மே பேங்க் வங்கி ஓர் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.