![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-14-Apr-2024-10-50-AM-1505.jpg)
கோலாலம்பூர், ஏப்ரல்-14 – ஈரானிய வான்வெளியைத் தவிர்க்கும் நோக்கில் கோலாலம்பூர் – லண்டன் இடையிலான விமானப் பயணங்களின் பாதையை MAS மாற்றவிருக்கிறது.
மேற்காசியாவில் அதிகரித்து வரும் பதட்ட நிலையைக் கருத்தில் கொண்டு அம்முடிவு எடுக்கப்படுவதாக அந்தத் தேசிய விமான நிறுவனம் கூறியது.
ஈரான், எந்நேரத்திலும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்கலாம் என்ற அச்சத்தில், முன்னெச்சரிக்கையாக ஏர் இந்தியா, குவாண்டாஸ் ஆஸ்திரேலியா, ஜெர்மனியின் லுஃப்தான்சா ஆகிய விமான நிறுவனங்கள் வரிசையில் தற்போது MAS-சும் தற்காலிகமாக அந்நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இவ்வேளையில் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியா, நடப்பில் எந்தவொரு பயணத்துக்கும் ஈரானிய வான்வெளியைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்ப்பார்த்ததை விட சீக்கிரமாகவே ஈரான் இஸ்ரேலைத் தாக்கலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமைக் கூறியிருந்தார்.
எனினும் Tehran-னின் அத்திட்டம் குறித்து வாஷிங்டன் மேற்கொண்ட ரகசிய உளவு நடவடிக்கையின் மேலதிகத் தகவல்களை பைடன் வெளியிடவில்லை.
சிரியாவில் உள்ள ஈரானியத் தூதரக வளாகத்தில் ராணுவப் படைத் தளபதிகள் சிலர் கொல்லப்படுவதற்குக் காரணமான இஸ்ரேலின் அண்மைய வான் தாக்குதலை அடுத்து, ஈரான் கடுங்கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.