கோலாலம்பூர், டிச 3 – ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான யு.பி.எஸ்.ஆர் பொதுத் தேர்வை மீண்டும் கொண்டு வருவதில்லை எனும் அரசாங்கத்தின் முடிவை ஆதரிப்பது என என்.யு.டி.பி (NUTP) எனப்படும் தேசிய ஆசிரியர் பணியாளர் தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது. வகுப்பறை அடிப்படையிலான இப்போதைய மதிப்பீட்டு முறையை அரசாங்கம் தொடர வேண்டும் என என்.யு.டி.பியின் தலைவர் அமினுடின் அவாங் தெரிவித்திருக்கிறார். வகுப்பறை மதிப்பீட்டு முறையில் பலவீனங்கள் இருக்குமானால் அதனை மேம்படுத்த முடியும். ஆனால் யு.பி.எஸ் .ஆர் தேர்வை மீண்டும் கொண்டு வர வேண்டியதில்லையென அவர் தெரிவித்தார். அதிகமான மாணவர்கள் 5 A பெறுவதையும் தங்களது பாடங்களில் மாணவர்கள் 5 A பெறுவதை உறுதிப்படுத்துவதற்கு ஆசிரியர்கள் அழுத்தத்திற்கு உள்ளாகுவதாக அமினுடின் கூறினார்.
தேர்வு அடிப்படையிலான பள்ளி முறையிலிருந்து வெளியேறுவதையே ஆசிரியர்களும் விரும்புகின்றனர். இன்றைய நவீன கால சவால்களை எதிர்நோக்குவதற்கு இது பொருத்தமாக இல்லையென்றும் அவர் கூறினார். நாட்டிற்கு ஆன்மீக , உணர்ச்சிகரமான, திறமையான , உடல் ரீதியிலான மற்றும் சமூக ரீதியிலான சீரான குடிமக்கள் தேவையென அவர் தெரிவித்தார். ஏற்படும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை காணவேண்டுமே தவிர அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே பதிலாக யூ.பி,எஸ்.ஆர் தேர்வு மீண்டும் கொண்டு வருவது என இருக்கக்கூடாது என அமினுடின் கேட்டுக்கொண்டார். அதோடு நாடு தழுவிய நிலையில் இருந்துவரும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னைக்கு நிரந்தர அல்லது ஒப்பந்த கால ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் அவர் வலியுறுத்தினார் .