![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-21-Nov-2023-11-03-AM-9292.jpg)
புதுடில்லி , நவ 21 – யேமனின் ஹவுதி (Houti) கிளர்ச்சிக்காரர்கள் இந்தியாவுக்கு சென்ற சரக்குக் கப்பலை கடத்தியிருப்பதோடு அது குறித்த இரண்டு நிமிட வீடியோவையும் பகிர்ந்துள்ளனர். துருக்கியில் இருந்து இந்தியா நோக்கிச் சென்ற “Galaxy Leader” என்ற சரக்குக் கப்பல் நேற்று கடத்தப்பட்டது. ஹமாஸ் மீதான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் கப்பல்களை தாங்கள் குறிவைத்திருப்பதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். எனினும் தாங்கள் கடத்திய கப்பலில் இஸ்ரேலியர்கள் எவரும் இல்லையென்று என்று அவர்கள் கூறினர். திரைப்படத்தில் வரும் காட்சியைப் போன்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் யாரும் இல்லாத அந்த கப்பலின் மேல்தளத்தில் தரையிறங்கினர். பின்னர் கூச்சல் போட்டு துப்பாக்கிச் சூடு நடத்தி, வீல்ஹவுஸ் மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை கைப்பற்றினர். அந்த வீடியோவில் கப்பல் ஊழியர்கள் அதிர்ச்சியோடு தங்கள் கைகளை மேலே உயர்த்தியிருந்ததை காணமுடிகிறது. இதர கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே கப்பலின் பல பகுதிகளுக்கு ஓடுவதையும் பார்க்க முடிகிறது.
யேமனின் சாலிஃப் துறைமுகத்திற்கு கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது என்று கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே மற்றும் யேமன் கடல்சார் ஆதாரத்தை மேற்கோள் காட்டி AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கடத்தல் ஆரம்பம் மட்டுமே என்று ஹவுதி செய்தித் தொடர்பாளர் முகமது அப்துல்-சலாம் ஞாயிற்றுக்கிழமை X இல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தார். காஸாவுக்கு எதிரான நடவடிக்கையை இஸ்ரேல் நிறுத்தாதவரை அந்நாட்டிற்கு எதிராக கடல்வழி தாக்குதல்கள் நடத்தப்படும் என அவர் உறுதியளித்தார். பஹாமாஸ் கொடியுடன் சென்று கொண்டிருந்த அந்த சரக்குக் கப்பலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 25 பணியாளர்கள் இருந்தனர்.