ரொனால்டோவுக்கு, 9.7 மில்லியன் யூரோக்களை சம்பள பாக்கியாக வழங்க வேண்டும் ; ஜுவென்டஸுக்கு உத்தரவு
![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-18-Apr-2024-01-12-PM-7371.jpg)
ரோம், ஏப்ரல் 18 – 2020/21-ருக்கான பருவத்தில், போர்த்துகலின் நட்சத்திர ஆட்டக்காரரான, கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு, 97 லட்சம் யூரோக்கள் அல்லது ஒரு கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலரை, ஜுவென்டஸ் செலுத்த வேண்டுமென, இத்தாலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழகிற்கான செலவுத் தொகை மற்றும் வட்டி ஆகியவையும் அதில் அடங்குமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ரொனால்டோ உண்மையில் பெற்ற சம்பளத்திற்கும், வரி மற்றும் பிற விலக்குகளுக்குப் பிறகு அவர் பெற்றிருக்க வேண்டிய சம்பளத்திற்கும் உள்ள வித்தியாசத்திற்கும் அந்தத் தொகை சமமாகும்.
2018-ஆம் ஆண்டு தொடங்கி 2021-ஆம் ஆண்டு வரையில், மூன்று பருவங்களில், இத்தாலியில், ஜுவென்டஸ் அணிக்காக விளையாடிய ரொனால்டோ, 2021/22-ஆம் ஆண்டுக்கான பருவத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டில் இணைந்தார்.
அதன் பின்னர், சவூதி கிளப்பான அல்-நாசருடன் கை கோர்த்த அவர் ஒரு கோடியே 95 லட்சம் யூரோக்களை கோரியிருந்தார். எனினும், அந்த தொகையை நீதிமன்றம் 50 விழுக்காடாக குறைத்தது.
இவ்வேளையில், அது குறித்து கருத்துரைக்க மறுத்துவிட்ட ஜுவென்டஸ், கூடிய விரைவில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என கூறியுள்ளது.
ஐந்து முறை Ballon d’Or வெற்றியாளரான ரொனால்டோ, கடந்தாண்டு உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரராக, அமெரிக்க வர்த்தக சஞ்சிகையான Forbes பெயர் குறிப்பிட்டிருந்தது.