
வாஷிங்டன், ஜூலை-15-அனைத்துலக விண்வெளி நிலையத்திற்குத் தனது முதல் விண்வெளிப் பயணத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் தொடங்கியுள்ளார்.
கசக்ஸ்தானில் உள்ள பைகானூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, ரஷ்யாவின் Soyuz MS-29 விண்கலம் மூலம் அனில் மேனன் நேற்று விண்ணில் பாய்ந்தார்.
அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் Pyotr Dubrov மற்றும் Anna Kikina ஆகியோரும் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளனர்.
சுமார் 8 மாதங்கள் அதாவது 240 நாட்கள் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து, அனில் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்.
குறிப்பாக, விண்வெளியில் செமிகண்டக்டர் படிகங்களை உருவாக்குதல், நுண் புவிஈர்ப்பு விசையில் இரத்த ஓட்டம் மற்றும் திசுக்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்த ஆய்வுகள், மற்றும் AI தொழில்நுட்ப உதவியுடன் கூடிய மருத்துவப் பரிசோதனைகள் ஆகியவை இதில் அடங்கும்.
நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பும் எதிர்கால விண்வெளித் திட்டங்களுக்கு இந்த ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அமெரிக்க விண்வெளி வீரர் மற்றும் மருத்துவர் எனப் பன்முகத்தன்மை கொண்ட அனில் மேனன், விண்வெளி நிலையத்தில் Expedition 74/75 குழுவுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.
ஏப்ரல் 2027-ல் அவர் பூமிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



