Latestஉலகம்

விமானப் பயணிகள் மீது புழுக்கள் கொட்டியதால் நடுவானில் பரபரப்பு

ஆம்ஸ்டர்டாம், பிப்ரவரி 16 – ஹாலந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து அமெரிக்காவின் டீத்திரோயிட் நகருக்குப் பயணமான விமானத்தில் பயணிகள் மீது திடீரென புழுக்கள் கொட்டியதால் விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வேண்டியதாயிற்று.

இருக்கைக்கு மேலே பயணிகளின் சிறியப் பைகளை வைக்கும் இடத்தின் மூடி திடீரென திறந்ததில், ஏராளமான புழுக்கள் கீழே அமர்ந்திருந்த பயணிகள் மீது விழுந்திருக்கின்றன. இதனால் ஏற்பட்ட பரபரப்பில் விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.

திரும்பிய வேகத்தில் சோதனையிட்டதில், யாரோ ஒரு பயணி வைத்திருந்த கெட்டுப் போன மீன்களில் இருந்து தான் புழுக்கள் விழுந்திருப்பது தெரிய வந்தது. துர்நாற்றமும் தூக்க, பயணிகள் முகம் சுளித்ததோடு, கெட்டுப் போன மீன்களை விமானத்தினுள் கொண்டு வந்து ஒன்றும் நடக்காதது போல இருந்த பெண் பயணியைக் கடிந்துக் கொண்டனர்.

விமானம் தரையிறங்கியதும் பயணிகள் வெளியேற்றப்பட்டு, கெட்டுப் போன மீன்களில் இருந்து புழுக்கள் விழுந்தப் பகுதி உடனடியாக சுத்தம் செய்யப்பட்டு எரிக்கப்பட்டது.

கெட்டுப் போன மீன்களுக்குச் சொந்தக்கார பெண் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டார்; ஆனால் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதா எனத் தெரியவில்லை.

எத்தனையோ காரணங்களுக்காக விமானங்கள் நடுவானில் திரும்பிய சம்பவங்கள் செய்திகளாக வந்திருக்கின்றன; ஆனால், பயணி கொண்டு வந்த கெட்டுப் போன மீன்களில் இருந்து புழுக்கள் கொட்டியதால் விமானம் தரையிறங்கியது இதுவே முதன் முறை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!