![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-09-Dec-2023-11-01-AM-316.jpg)
கோலாலம்பூர், டிச 9 – வாழ்நாள் முழுவதிலும் இருந்த சேமிப்பு தொகையை பயன்படுத்தி பல்வேறு சிரமங்களுக்கிடையே வீடு வாங்கியோர் அதனை மறுசீரமைப்பதற்கான சேவையை வழங்குவதாக சமூக வலைத்தளத்தில் வெளியான தகவலை நம்பி இதுவரை 40 பேர் தங்களது பணத்தை பறிகொடுத்துள்ளதாக செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரெசா கோக் அம்பலப்படுத்தினார். வீடு வாங்கியோரின் விருப்பங்களுக்கு ஏற்ப வீட்டை மறுசீரமைப்பதாக சமூக வலைத்தளத்தில் சில குத்தகையாளர்கள் பதிவேற்றம் செய்த வாக்குறுதிகளை நம்பி அந்த 40 பேர் தங்களது பணத்தை இழந்ததாக அவர் கூறினார்.
இத்தகைய மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் காணொளி ஒன்றை வெளியிட்டபோது தெரெசா கோக் இத்தகவலை வெளியிட்டார். புதிய வீடு வாங்கும் மகிழ்ச்சி அவ்வீட்டை மறுசீரமைப்பு செய்வதற்கு வழங்கும்போது குத்தகையாளர்கள் நேர்மையாக தங்களது வேலையை செய்யத் தவறுவதோடு வீட்டையும் பளுதாக்கிவிட்டு பணத்தோடு தலைமறைவாகி விடுகின்றனர். இத்தகைய குத்தகையாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என தெரெசா கோக் கேட்டுக்கொண்டார்.