![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/5.png)
அம்பாங் ஜெயா, மே-26 – அம்பாங் ஜெயாவில் உள்ள பள்ளியொன்றில், ஆசிரியரால் திடலில் வெயிலில் காயுமாறு தண்டனை விதிக்கப்பட்ட 5-ம் வகுப்பு மாணவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
அச்சம்பவம் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நிகழ்ந்திருக்கிறது.
தானும் தனது நண்பனும் காலை 10 மணியில் இருந்து நண்பகல் 12.50 வரை வெயில் காய வைக்கப்பட்டதாக மகன் கூறியதாக, தாயார் மோகனா தெரிவித்தார்.
வேறொரு மாணவன் தம்மை அடித்ததாக அந்த ஆசிரியரிடம் புகார் செய்யப் போன என் மகனை, அவர் திடலில் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைத்து விட்டார் என மோகனா கூறினார்.
அப்போது சூடு தாங்காமல் தலை சுற்றுவதாக மகன் கூறியும் ஆசிரியர் கண்டு கொள்ளவில்லை என்றார் அவர்.
மகன் பலவீனமாக இருப்பதைக் கண்டு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்ற போது, அவன் heat exhaustion எனப்படும் வெப்ப சோர்வால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டதாக மோகனா கூறினார்.
மகனின் உடல் பாதிக்கும் அளவுக்கு ஆசிரியர் தண்டனை விதித்திருப்பது சற்று அதிகபட்சமே என ஏமாற்றம் தெரிவித்த அம்மாது, அவ்விவகாரத்தை கல்வி அமைச்சு உள்ளிட்ட தரப்புகள் கவனிக்க வேண்டும் என்றார்.
இது குறித்து அவர் போலீசிலும் புகார் செய்துள்ளார்.
அதனை உறுதிச் செய்த அம்பாங் ஜெயா போலீஸ், அச்சம்பவம் 2001 சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாகக் கூறியது.