புதுடெல்லி, நவ 27 – வெளிநாடுகளில் திருமணங்களை நடத்தும் சில பெரிய குடும்பங்களின் போக்கால் தாம் கவலையடைந்துள்ளதாகக் கூறிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பணம் வெளியேறாமல் இருக்க இந்திய மண்ணில் இதுபோன்ற கொண்டாட்டங்களை நடத்துமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். திருமணங்களுக்கு பொருட்களை வாங்கும்போது , இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தமது மன் கி பாத் (Mann Ki Baat) வானொலி உரையில் மோடி வலியுறுத்தினார். தற்போது இந்தியாவில் திருமண காலம் தொடங்கியுள்ளது. இந்த திருமண காலத்தில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கும் என சில வர்த்தக நிறுவனங்கள் கணித்துள்ளன.
தற்போது சில குடும்பங்கள் வெளியூர் சென்று திருமணங்களை நடத்தும் புதிய சூழல் உருவாகி வருகிறது. இது தேவையா? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். இந்திய மண்ணில் திருமண விழாக்களை மக்கள் கொண்டாடினால், நாட்டு மக்கள் மத்தியில், நாட்டின் பணம் நாட்டிலேயே தங்கிவிடும் என வலியுறுத்தினார். இவ்வாறான திருமணங்களில் நாட்டு மக்களுக்கு ஏதாவது சேவை செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பை மக்கள் ஏற்றுக் கொள்ளும்போது, அந்த நாடு முன்னேறுவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் பிரதமர் மோடி தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.