![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-12-Dec-2023-12-34-PM-16.jpg)
தீரா, டிசம்பர் 12 – தென் லெபனானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது, அமெரிக்கா விநியோகம் செய்த வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த தாக்குதலில், பொதுமக்களில் குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்த வேளை ; போர்க்குற்றமாக கருதப்படும் அந்த தாக்குதல் தொடர்பில், விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென, மனித உரிமை அமைப்புகள், நெருக்குதல் அளித்து வருகின்றன.
தீராவை நோக்கி பாய்ச்சப்பட்ட 155 மீட்டர் பீரங்கி குண்டுகளின் உடைந்த பாகங்கள், இஸ்ரேல் எல்லைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த தாக்குதலில், குறைந்தது நான்கு வீடுகள் முற்றாக அழிந்தன.
1980-ஆம் ஆண்டு, ஜெனீவா உடன்படிக்கையின் கீழ், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் பயன்பாட்டுக்கு, அனைத்துலக அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மனிதர்களுக்கும், சுற்றுசூழலுக்கும் எதிராக தீங்கிழைக்கும் ஆயுதமாக அதனை பயன்படுத்துவதை ஜெனீவா உடன்படிக்கை வெளிப்படையாக தடை செய்கிறது.
இதனிடையே, தென் லெபனானில் நடந்த தாக்குதலில், இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியதாக வெளியான செய்திகள் குறித்து அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ள நிலையில் ; அனைத்துலக சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே தமது தரப்பு செயல்படுவதாக, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர், அந்த தாக்குதலை தற்காத்து பேசியுள்ளார்.