![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-12-Feb-2024-12-50-PM-1632.jpg)
கோலாலம்பூர், பிப்ரவரி 12 – தலைநகர், செராஸிலுள்ள, ஸ்ரீ சபா அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள, 70-வது புளோக்கிலுள்ள, தனது வீடு எரிந்து சாம்பலானதால், விற்பனை முகவர் ஒருவரின் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது.
அதில் மனவேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், தனது அண்டை வீட்டிலிருந்து மூண்ட அந்த தீயை, 39 வயது லூ சூன் மிங் எனும் அந்த ஆடவரால் அணைக்க முடியாமல் போனது தான்.
சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் 17-வது மாடியில் வைக்கப்பட்டிருந்த, தீயை அணைக்கும் கருவியை இயக்க முடியாமல், செயலிழந்து இருந்ததே அதற்கு காரணம்.
இரவு மணி எட்டு வாக்கில், தீ பரவத் தொடங்கிய போது, லூவும் அவரது 62 வயது தாயாரும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
முதலில், சிறிய அளவில் ஏற்பட்ட புகை மூட்டம் பின்னர் மோசமடைந்ததால், உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறிய போது தீ பரவுவதை லூ பார்த்துள்ளார்.
அதனை தொடர்ந்து, லூவும் இதர அண்டை வீட்டுக்காரர்களும், தண்ணீர் மற்றும் தீயை அணைக்கும் கருவியை பயன்படுத்தி, சுமார் 20 நிமிடங்களுக்கு தீயை அணைக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
அதனால், உடனடியாக தீயணைப்பு மீட்புப் படைக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் லூ சொன்னார்.
அச்சம்பவத்தில், லூவின் வீடு உட்பட இதர நான்கு வீடுகள் முற்றாக தீயில் அழிந்தன. எனினும், உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை.