![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-27-May-2024-02-05-PM-1808.jpg)
கோலாலம்பூர், மே 27 – இளைஞர் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோவின் கணவருக்கு சொந்தமான ஆசியா மோபிலிட்டி டெக்னாலோஜிஸ் நிறுவனத்திற்கு, சிலாங்கூர் மாநில அரசாங்கம் குத்தகை வழங்கியதில், எந்தத் தவறும் இல்லை என, MACC – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இளைஞர் விளையாட்டு அமைச்சரான ஹன்னாவின் பொறுப்புகளுக்கும், சிலாங்கூர் மாநில அரசாங்கத்துக்கும் தொடர்பு இல்லை என MACC தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஜாம் பாக்கி கூறியுள்ளார்.
ஹன்னா அல்லது அவர் அமைச்சராக இருக்கும் போது இளைஞர் விளையாட்டு அமைச்சு, அவரது கணவரால் வழிநடத்தப்படும் நிறுவனத்திற்கு குத்தகையை வழங்கினால் தான், அது குற்றமாகும் என்பதையும் அஜாம் தெளிவுப்படுத்தினார்.
அதனால், ஹன்னாவின் கணவருக்கு சிலாங்கூர் அரசாங்கம் குத்தகை வழங்கியதற்கும், ஹன்னாவிற்கும் சம்பந்தம் இல்லை.
DRT முன்னோடி திட்டத்தை நிர்வகிக்க சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிறுவனங்களில் Asia Mobility நிறுவனமும் ஒன்றென ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அந்நிறுவனம் ஹன்னாவின் கணவர் ராமசந்திரன் முனியாண்டிக்கு சொந்தமானது என்பதால், அதற்கு எவ்வாறு சிலாங்கூர் அரசாங்கத்தின் குத்தகை வழங்கப்பட்டது? எனவும், வெளிப்படையான குத்தகை வாயிலாக அது வழங்கப்பட்டதா? எனவும், @RakyatAduan எனும் X சமூக ஊடகம் வாயிலாக கேள்வி எழுப்பப்பட்டது.
எனினும், அனுபவம் அடிபடையில் முறையாக அந்த குத்தகை வழங்கப்பட்டதாக, கடந்த வெள்ளிக்கிழமை சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ங் ஸ்லீ ஹான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.