![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/2-1-681x439-1.jpg)
கோலாலம்பூர், மார்ச் 23 – தங்களின் ஹலால் சான்றிதழ் மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு, மூலப் பொருட்களோ அல்லது ஹலால் அல்லாத பொருட்கள் கலக்கப்பட்டதோ காரணமல்ல; அதே சமயம், சுகாதார பிரச்னையும் பெரிதாக எதுவும் எழவில்லை என பிரபல மசாலைத் தூள் தயாரிப்பு நிறுவனமான அழகப்பாஸ் கூறியுள்ளது.
மாறாக, தொழிலாளர் பற்றாக்குறை தொடர்பான சிறிய தொழில்நுட்ப விஷயம் காரணமாகவே மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை JAKIM அச்சான்றிதழை மீட்டுக் கொண்டதாக அழகப்பா மாவு மில் தெளிவுப்படுத்தியது.
அப்படியொன்றும் மோசமில்லாத சில தொழில்நுட்ப தவறுகள் காரணமாக ஆரம்பத்தில் ஹலால் சான்றிதழ் தற்காலிகமாக மட்டுமே ரத்துச் செய்யப்பட்டது.
“ சுட்டிக் காட்டப்பட்ட அம்சங்களை மேம்படுத்துமாறு எங்களுக்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது; ஆனால் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னையால், மேம்படுத்த வேண்டிய அம்சங்களை JAKIM கொடுத்த காலத்திற்குள் எங்களால் முடிக்க முடியாமல் போய் விட்டது; அதனால் தான் ஹலால் சான்றிதழ் முழுமையாக மீட்டுக் கொள்ளப்பட்டு விட்டதாக” அறிக்கையொன்றில் அழகப்பாஸ் விளக்கியது.
இதையடுத்து, உடனடி நடவடிக்கையாக எங்கள் நிறுவனத்தின் ஆள்பலம் குறிப்பாக ஹலால் தொடர்புடைய விவகாரங்களைக் கையாளும் ஆட்களைக் கூட்டியுள்ளோம்; அதோடு ஹலால் தொடர்பான விவகாரங்களை வியூகத்தோடு கையாள ஏதுவாக அழகப்பாஸ் ஹலால் பிரிவு என ஒன்றை அமைத்துள்ளோம் என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
இப்படி அனைத்து விவகாரங்களையும் முறைப்படி செய்து வருவதால், மீண்டும் ஹலால் சான்றிதழுக்கு தாங்கள் Jakim-மிடம் விண்ணப்பித்திருக்கும் தகவலையும் அது வெளியிட்டது.
எல்லாம் சரியாக நடந்தால் இம்மாத இறுதிக்குள் ஹலால் சான்றிதழைப் பெறுவதற்கான தணிக்கைக்கு நாங்கள் அழைக்கப்படலாம் என அது நம்பிக்கைத் தெரிவித்தது.
அழகப்பாசின் ஹலால் சான்றிதழை JAKIM மீட்டுக் கொண்ட செய்தி வைரலான நிலையில், அழக்கப்பாஸ் இவ்விளக்கத்தை அளித்திருக்கிறது.