![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/2718301.jpeg)
கோலாலம்பூர், மே-28 – சிலாங்கூர் அரசாங்கத்தின் DRT திட்ட குத்தகை, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹானா யோவின் கணவர் இணை உரிமையாளராக இருக்கும் நிறுவனத்துக்குக் கிடைத்திருக்கும் விவகாரத்தை, அதிகாரத் தரப்பின் விசாரணைக்கே விட்டு விடுவதாக பிரதமர் கூறியுள்ளார்.
அது குறித்து புகார் இருந்தால், மற்ற புகார்களைப் போலவே அதிகாரத் தரப்பு வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சொன்னார்.
புகார்கள் வரும் போது, விசாரணைகள் நடைபெறுவதும், அது குறித்து விளக்கமளிக்கப்படுவதும் வழக்கமான நடைமுறை; இந்த விவகாரத்திற்கும் அந்நடைமுறை பொருந்தும் என்றார் அவர்.
DRT முன்னோடி திட்டத்தை மேற்கொள்வதற்குத் தேர்வாகியுள்ள இரு நிறுவனங்களில், Asia Mobility Technologies Sdn Bhd-டும் அடங்கும் என சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் Ng Sze Han கடந்த வாரம் கூறியிருந்தார்.
அவ்விரு நிறுவனங்களுக்கும் APAD எனப்படும் தரைப் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைத்து விட்டதாகவும் அவர் சொன்னார்.
Asia Mobility நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஹானா யோவின் கணவர் ராமசந்திரன் முனியாண்டி என தெரிய வந்ததில் இருந்து, இவ்விவகாரம் சர்ச்சையானது.
ஆனால் அது குறித்து கருத்துரைத்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC-யின் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki, கணவரின் நிறுவனத்துக்கு அக்குத்தகை வழங்கப்பட்டதில் ஹானா யோவுக்கு தொடர்பில்லை;
அப்படி குத்தகை வழங்கப்பட்டதில் தவறும் இல்லை என அவர் தெளிவுப்படுத்தியிருந்தார்.