ஷா அலாம் , மார்ச் 12- உண்மையிலேயே தேசிய ஒருமைப்பாட்டை நினைப்பதாக இருந்தால் மாற்று கருத்துக்களை கொண்டிருப்பவர்களை சிறுமைப்படுத்தக்கூடாது என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் முஹமட் அக்மல் சலேவை சிலாங்கூர் புக்கிட் காசிங் DAP சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷிகரன் சாடினார். தாய்மொழிப் பள்ளிகள் விவகாரம் தொடர்பில் பினாங்கின் முன்னாள் துணை முதலமைச்சர் பேராசியரியர் டாக்டர் ராமசாமியை சிறுமைப்படுத்தும் வகையில் சாடி அக்மால் வெளியிட்ட அறிக்கை நாகரீகமாக இல்லையென தெரிவித்தார்.
மாற்று கருத்துக்களை கொண்டவர்களை சிறுமைப்படுத்துவது தேசிய ஒற்றுமைக்கான தடமாக இருக்காது என அவர் நினைவுறுத்தினார். அக்மால் போன்ற அரசியல்வாதிளால்தான் நாட்டில் இன்னமும் இனங்களுக்கிடையிலான ஒன்றுமையை வளர்க்க முடியவில்லையென தமது முகநூலில் பதிவிட்ட அறிக்கையில் ராஜீவ் ரிஷிகரன் தெரிவித்தார். தாய்மொழிப் பள்ளிகள் நாட்டில் பல ஆண்டுகாலமாக நாட்டிற்கு வெற்றியை கொண்டு வந்துள்ளன.
இன்றைய காலக்கட்டத்தில் தேசிய பள்ளிகளைவிட சீனப் பள்ளிகள் அனைத்து இன மாணவர்களையும் கொண்டுள்ளது. அப்படி இருக்கும்போது அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்த அக்மால் தவறியது ஏன் என ராஜீவ் ரிஷிகரன் வினவினார். தேசிய ஒற்றுமை தொடர்பில் அக்மால் நேர்மையை கொண்டிருந்தால் பொதுவான விவாதத்திற்கு வரவேண்டும்.
அரசியல் கட்சிகள் மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்களுடன் பேச்சு நடத்தவேண்டும். அவர்கள் தாய்மொழி கல்வி குறித்து நன்கு அறிந்துள்ளனர் என்பதோடு எங்கிருந்து வந்தனர் என்பதையும் அறிந்தவர்கள். அனைத்து மலேசிய மக்களுக்குமான ஒற்றுமை அரசாங்கத்தின் வெற்றியின் பொறுப்புணர்வு நாம் இருவருக்கும் இருக்கிறது.
அதைவிடுத்து காப்பி வாங்கி தருகிறேன், தாய்மொழி பள்ளி குறித்து விவாதிக்க வாருங்கள் என டாக்டர் ராமசாமியை கிண்டல் செய்வது அம்னே இளைஞர் பிரிவின் தலைவருக்கு அழகல்ல. காப்பி அருந்துவதற்கு என்னுடன் வாருங்கள் அந்த செலவை நான் ஏற்கிறேன், நீங்கள் ஏற்கிறீர்களா என ராஜீவ் ரிஷிகரன் கூறினார். தாய்மொழிப் பள்ளி விவகாரத்தில் ‘Bangsa Malaysia’வுக்கு ஆதரவாக தாய்மொழிப்பள்ளிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைக்கு அக்மால் போன்றவர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என சிலாங்கூர் DAP யின் தேர்தல் பிரிவு இயக்குனருமான அவர் கேட்டுக்கொண்டார்