கோலாலம்பூர், ஜன 16 – மலேசிய வாழ் மக்களின் விசுவாசத்தை பற்றி பேசுவதற்கு துன் டாக்டர் மகாதீருக்கு தகுதி இல்லை என்று சாடியுள்ளார் தொழில்முனைவர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோ ஆர் ரமணன்.
‘மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமரான துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கே கட்சித் தாவல் காரணமாக நிலையான பதவி இல்லை. இந்நிலையில் அவர் இந்திய சமூகம் இந்த நாட்டிற்கு விசுவாசமாக இல்லை என்று கூறுவது நியாயமற்றது’ என கூறியுள்ளார் ரமணன்.
மலேசிய இந்திய சமூகமும் இந்த நாட்டிற்காக போராடி உயிர் தியாகம் செய்துள்ளனர். இன்றளவும் மலேசிய ஆயுதப் படையிலும், அரசு மலேசிய காவல்துறையிலும் இந்தியர்கள் பணியாற்றுவதை துன் மகாதீர் அறிந்திருக்க வேண்டும் என்று மலேசிய கூட்டுறவு ஆணை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரமணன் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டு கூட்டுறவு அமைப்புகளின் மேம்பாட்டிற்காக 11.75 மில்லியன் ரிங்கிட் நிதியை மலேசியக் கூட்டுறவு ஆணையமான சுருஹான்ஜயா கொப்பெராசி மலேசியா (SKM) ஒதுக்கியுள்ளது.
இவ்விவகாரம் குறித்து தகவல் அளித்த ரமணன், அந்த நிதியில், 6.75 மில்லியன் ரிங்கிட் வியாபார வளர்ச்சித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.