புது டெல்லி, நவ 23 – அதிக பற்கள் கொண்ட பெண்ணாக உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் 26 வயது இந்தியாவின் கல்பனா பாலன் என்பவர்.
பொதுவாகவே 32 பற்களைத்தான் மனிதர்கள் கொண்டிருப்பார்கள். ஆனால் இவருக்கொ 38 பற்கள்.
ஒரு பிள்ளைக்கு தாயான கல்பனாவின் மேல் தாடையில் கூடுதலாக 2 பற்களும் கீழ் தாடையில் 4 பற்களும் முளைத்துள்ளன.
இந்த கூடுதல் பற்களால் தனக்கு வலி ஏதும் இல்லை என்றாலும், சாப்பிடும் போது, உணவுப் பொருட்கள் இந்த பற்களுக்கு இடையில் மாட்டிக் கொள்வதால் அசெளகரியம் ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.
சிறுவயதில் இந்த கூடுதல் பற்கள் வளருவதைக் கண்ட அவரது பெற்றோர் அதை பிடுங்கிவிடுமாறு கல்பனாவிடம் கூறியுள்ளனர். ஆனால் அதை பிடுங்குவது சிரமம் என்பதால் மருத்துவர்களை அதனை வளர்ந்த பிறகு பிடுங்கிக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
ஆனால் பற்கள் வளர்ந்தப் பிறகு பிடுங்குவதற்கு பயந்த கல்பனா அதை அவ்வாறே விட்டுவிட முடிவு செய்துள்ளார்.
இன்னும் இரண்டு பற்கள் வளராமல் இருப்பதால், எதிர்காலத்தில் கல்பனா புதிய சாதனை படைக்க வாய்ப்புள்ளது.
உலகில் அதிகமான பற்களைக் கொண்ட ஆணாக கனடாவைச் சேர்ந்த எவனோ மெலோன் திகழ்கிறார். அவருக்கு மொத்தம் 41 பற்கள் உள்ளன.