கோலாலம்பூர், ஜன 18 – நாடு முழுவதிலும் சட்டவிரோத குடியேறிகள் குடியிருக்கும் 220 இடங்கள் மற்றும் அவர்கள் கூடும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அதிரடி சோதனை நடத்துவதற்காக அவர்கள் தூங்கும்வரை நாங்கள் காத்திருப்போம் என குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார். வெளிநாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் இடங்களிலிருந்து அவர்களை வெளியேற்றுவதற்கு முழுவீச்சிலான சோதனை நடவடிக்கையில் குடிநுழைவுத்துறை ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாண்டு ஜனவரி 1 ஆம்தேதி தொடங்கி இதுவரை 16 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட 714 சோதனை நடவடிக்கைகளில் 3,261 சட்டவிரோத குடியேறிகளும் அவர்களை வேலைக்கு வைத்திருந்த 35 தொழில் நிறுவனங்களின் முதலாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊராட்சி மன்ற அதிகாரிகள் உட்பட பல தரப்பினரின் ஒத்துழைப்போடு சட்டவிரோத குடியேறிகள் தங்கியிருக்கும் வசிப்பிடப் பகுதிகள் மற்றும் வர்த்தக மையங்களிலும் தொடர்ந்து நடைபெறும். சட்டவிரோத குடியேறிகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து அதிகமான புகார்கள் பெறப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ருஸ்லின் கூறினார்.