ஜார்ஜ் டவுன்,நவம்பர் 6 – கடந்த மாதம், வெளிநாட்டு சுற்றுப் பயணியை கொள்ளயிட்ட குற்றச்சாட்சை ஒப்புக் கொண்ட 19 வயது இளைஞனை, மலாக்காவிலுள்ள, ஹென்றி கர்னி பள்ளிக்கு அனுப்புமாறு, பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முஹமட் இம்ரான் யாஹ்யா எனும் அந்த இளைஞன் மூன்றாண்டு அல்லது 21 வயது நிறைவடையும் அந்த தண்டனையை அனுபவிக்க வேண்டுமென, நீதிபதி உத்தரவிட்டார்.
அக்டோபர் 28-ஆம் தேதி, மாலை மணி 5.20 வாக்கில், லெபு கேம்ப்பெல்லுள்ள, உணவகம் ஒன்றில், அந்நிய பெண் சுற்றுப் பயணி ஒருவரை கொள்ளையிட்டதையும், அவரது கைப்பேசி, கண் கண்ணாடி, சாவி கொத்து, பிரிட்டிஷ் கொலம்பியா சேவை அட்டை ஆகியவை வைக்கப்பட்டிருந்த பையை எடுத்துச் சென்றதையும், சமையல்காரராக பணிப்புரிந்த அந்த ஆடவன் ஒப்புக் கொண்டதை அடுத்து, அவனுக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வேளையில், மேலும் இரு பெண்களிடம் கொள்ளையிட்டது தொடர்பில், இதர இரு வேறு குற்றச்சாட்டுகளையும் அவன் எதிர்நோக்கியுள்ளான்.
அவ்விரு வழக்குகளும், டிசம்பர் நான்காம் தேதி செவிமடுக்கப்படும்.