![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-28-Jun-2024-08-34-AM-924.jpg)
அம்பாங், ஜூன்-28, ‘Demo Rakyat Lawan Anwar’ பேரணி ஏற்பாட்டாளர்கள், அது திட்டமிட்டபடி நாளை சனிக்கிழமை புத்ராஜெயாவில் நடந்தேறும் என அறிவித்துள்ளனர்.
பேரணிக்கு அனுமதியில்லை என புத்ராஜெயா கழகம் (Perbadanan Putrajaya) அறிவித்துள்ள போதிலும், அதை நடத்துவதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என ஏற்பாட்டுக் குழுத் தலைவர் அய்டில் யூனோஸ் (Aidil Yunus) தெரிவித்தார்.
2012 அமைதிப் பேரணி சட்டத்தின் கீழ் அப்பேரணியை நடத்த தங்களுக்கு எல்லாவித உரிமையும் உண்டு என அவர் சொன்னார்.
மாலை 4.30 மணிக்கு நடைபெற திட்டமிடப்பட்டுள்ள அப்பேரணியின் நோக்கமே, மக்கள் படும் இன்னல்களைக் கருத்தில் கொண்டு மாற்றங்களைக் கொண்டு வருமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வலியுறுத்துவது தான்.
எண்ணெய் மற்றும் டீசல் விலைக் குறைப்பு, எரிவாயு விலையேற்றம் கூடாது, விலையேற்றம் இல்லாமல் உள்ளூர் அரிசி கையிருப்பை அதிகரிப்பது, மக்களின் பேச்சுரிமை – சமூக ஊடகங்களில் கருத்துரிமை ஆகியவற்றை நிலை நிறுத்துவது உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை அப்பேரணி வலியுறுத்தும் என அய்டில் விளக்கினார்.
சுமார் 600 பேர் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படும் அப்பேரணி எவ்வித அசம்பாவிதமுமின்றி அமைதியாக நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அப்பேரணிக்கு புத்ராஜெயா கழகம் அனுமதி தரவில்லை என்பதால் அத்திட்டத்தைத் தொடர வேண்டாம் என ஏற்பாட்டாளர்களை கோலாலம்பூர் போலீஸ் அறிவுறுத்தியிருந்தது.