ஜோகூர் பாரு, ஜன 8 – கோத்தா திங்கிக்கு அருகே வலுவான நீரோட்டத்தினால் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட காரிலிருந்த பெண்ணை ஆடவர் ஒருவர் காப்பாற்றி ஹரோவாகியிருக்கிறார்.
தாம் எதுவுமே நினைக்காமல் காரில் இருந்த பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு கால்வாயில் குதித்ததாக 50 வயதுடைய சூ ங்கியம் சூங் கூறியுள்ளார்.
“காலை 8 மணியளவில் கோத்தா திங்கியிலிருந்து மாவாய்க்கு பசியாறச் சென்றபோது எனக்கு முன்னால் சென்ற எனது நண்பர் காரை நிறுத்தியபோது நானும் காரை நிறுத்தினேன்.
கால்வாயில் கார் ஒன்று நீரோட்டத்தில் அடித்து சென்றுக் கொண்டிருந்ததோடு அதில் இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் பாதுகாப்புடன் வெளியேறிவிட்டார். மற்றொரு பெண் ஆபத்தில் சிக்கியிருக்கிறார் என்பதை உணர்ந்தவுடன் நான் உடனடியாக கால்வாயில் குதித்து அந்த பெண்ணை காப்பாற்றினேன். இதர சில நண்பர்கள் மற்றும் அவ்வழியே சென்ற மற்றவர்களும் உதவிக்கு வந்தனர்” என சூ ங்கியம் சூங் நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார்.
எந்தவொரு அசாம்பாவிதமும் இன்றி ஐந்து வினாடிகளுக்குள் அப்பெண்ணை காப்பாற்றியதற்காக தாம் மகிழ்ச்சிஅடைவதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.
கோத்தா திங்கி – மெர்சிங் சாலையில் ஜாலான் புக்கிட் சம்சுவுக்கு அருகே நிகழ்ந்த அந்த சம்பவம் குறித்த காணொளி நேற்று வைரலானது.