கோலாலம்பூர், நவ 27 – பாலஸ்தீனர்களுக்கு நன்கொடைகள் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட அமான் பாலஸ்தீன் (Aman Palestin) அமைப்பு நன்கொடைகளை தங்கக் கட்டிகள் வாங்குவதற்கும், சிலாங்கூர் உட்பட இதர மாநிலங்களில் கட்டிடங்கள் மற்றும் நிலம் வாங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது என எம்.ஏ.சி.சி(M.A.C.C) விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் நிலங்கள் உட்பட 27 சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அமான் பாலஸ்தீனுக்கான பணம் இதர நிறுவனங்களின் கணக்குகளுக்கும் மாற்றப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டது. ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடை கொண்ட நான்கு தங்கக் கட்டிகள் மற்றும் நான்கு கைத்தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அமான் பாலஸ்தீன் அலுவலகம் உட்பட அந்த அமைப்பின் மூன்று அதிகாரிகளின் இல்லங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக எம்.ஏ.சி.சியின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி தெரிவித்தார். இதுவரை விசாரணைக்காக 11 பேர் அழைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். விசாரணைக்காக மேலும் பலர் அழைக்கப்படலாம் என்றும் அவர் கூறினார். 42 வங்கிகளில் உள்ள 25 மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேற்பட்ட தொகையும் முடக்கப்பட்டுள்ளதாக இம்மாதம் 23 ஆம் தேதி எம்.ஏ.சி.சி அதிகாரிகள் கூறியிருந்தனர்.