
கிள்ளான், மே-14 – இந்தியா – காஷ்மீர் மோதல் தொடர்பில் பெர்லிஸ் முஃப்தி Dr Maza அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதி ராவ் அதிர்ச்சியும் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.
“இந்திய இராணுவம், காஷ்மீரிலும் மற்ற இடங்களிலும் முஸ்லீம் பெண்களைக் கற்பழித்து கொல்கிறது, மோடி அரசாங்கம் இஸ்லாத்துக்கு எதிரான அடக்குமுறை அரசாங்கம், காஷ்மீர் இஸ்லாமியர்களுக்கேசொந்தமானது ஆனால் இந்தியா அதனை இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி செய்கிறது” என பல்வேறு குற்றச்சாட்டுகளை Dr Maza வெளியிட்டுள்ளார்.
இவையெல்லாம் உண்மைக்குப் புறம்பானவை மட்டுமல்ல, மாறாக பொறுப்பற்ற மற்றும் தீவிரவாதத்துக்கு வழி வகுக்கும் வகையில் உள்ளன.
இது போன்ற வார்த்தைகள் பொது சொற்பொழிவுகளில் அதுவும் மதிக்கப்படும் ஒரு மதத் தலைவரின் வாயிலிருந்து வெளிப்படும் போது, மதவாதம் தூண்டப்படும் அபாயமும் உள்ளதை, கணபதி ராவ் சுட்டிக் காட்டினார்.
காஷ்மீர் விவகாரம் போன்று, இன்னொரு நாட்டின் சொந்த பிரச்னைகளை இங்கு மதரீதியாக கோர்த்துவிடும் Dr Maza-வின் பேச்சு, உள்ளூர் நல்லிணக்கத்தைக் கெடுத்து விடும்.
இங்கு லட்சக்கணக்கான இந்துக்களும், இந்திய வம்சாவளி மக்களும் உள்ளனர் என்பதை மறந்து விடக் கூடாது.
ஆனால் Dr Maza-வின் மதவாத பேச்சு குறித்து, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு இதுவரை வாய்த் திறக்கவில்லை.
குறைந்தபட்சம் ஒரு கண்டன அறிக்கைக் கூட இல்லை; எனவே வெறுப்புணர்வைத் தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிச் செய்ய, இதில் பிரதமரே தலையிட வேண்டும்.
உள்துறை அமைச்சும் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுக் கழகமானJAKIM-மும் பாரபட்சமின்றி Dr Maza-வின் பேச்சு தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியா – மலேசியா நல்லுறவுத் தொடர, இத்தகைய கருத்துகள் மலேசியாவின் நிலைப்பாடு அல்ல என்பதை விஸ்மா புத்ரா, இந்தியத் தூதரகத்திடம் தெளிவுப்படுத்த வேண்டுமென கணபதி ராவ் அறிக்கை வாயிலாக வலியுறுத்தினார்.
இந்தியா – பாகிஸ்தான் மோதலில், இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் பக்கமே மலேசியா நிற்க வேண்டுமென்ற கருத்தை வெளியிட்டு பேசிய போது, Dr Maza அக்குற்றச்சாட்டுகளை முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.