![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/07/MixCollage-04-Jul-2024-05-02-PM-338.jpg)
கோலாலம்பூர், ஜூலை 4 – ஒன்பது லட்சத்து 31 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், பொதுச் சேவை ஊதிய முறை மதிப்பாய்வில் உள்ள அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்கு ஏற்ப ஒருங்கிணைக்கப்படும்.
1980-ஆம் ஆண்டு ஓய்வூதிய சட்டத்தின் கீழ், அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக, பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா (Dr Zaliha Mustafa) தெரிவித்தார்.
பணியில் இருக்கும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மறுஆய்வுச் செய்யப்பட்டால், அதற்கு ஏற்ப ஓய்வூதியத்தையும் ஒருங்கிணைக்க அந்த சட்டம் வகை செய்கிறது.
அதனால், இவ்வாண்டு அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு ஏற்ப, பணி ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியமும் ஒருங்கிணைக்கப்படுமென, மக்களவைக்கு வழங்கிய எழுதுப்பூர்வ பதிலில் ஜாலிஹா தெரிவித்தார்.
முன்னதாக, அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான விவரங்கள், வரும் அக்டோபர் மாதம் 2025 வரவுச் செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அறிவிக்கப்படும் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.