கோலாலம்பூர், பிப்ரவரி 15 – ஜானா விபாவா மோசடியில் முன்னாள் பிரதமர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் மீதான 3 வழக்குகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அரசு தரப்பின் விண்ணப்பத்தை ஏற்று செஷன்ஸ் நீதிமன்றம் அவ்வழக்குகளின் விசாரணைகளை நிறுத்தி வைக்க இன்று உத்தரவிட்டது. அதே ஜானா விபாவா மோசடியில் அதிகார முறைகேடு செய்த குற்றச்சாட்டில் இருந்து முஹிடினை உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாங்கள் செய்துள்ள முறையீட்டின் தீர்ப்பு வரும் வரை, 20 கோடி ரிங்கிட்டை உட்படுத்திய இந்த 3 பணச்சலவை வழக்குகளும் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என அரசு தரப்பு நீதிமன்றத்திடம் கோரியிருந்தது. அதனை பரிசீலித்த நீதிபதி அரசு தரப்பின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். ஜானா விபாவா திட்டம் மூலம் பிரதமர் என்ற அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, தமது தலைமையிலான பெர்சத்து கட்சிக்கு 23 கோடியே 25 லட்சம் ரிங்கிட்டை லஞ்சமாக முஹிடின் பெற்றதாக முன்னதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. எனினும், அதில் நான்கு குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு விட்ட நிலையில், பணச்சலவை செய்ததாக 3 குற்றச்சாட்டுகளை முஹிடின் இன்னமும் எதிர்நோக்கியுள்ளார்.