கோலாலம்பூர், டிச 26 – கோலாலம்பூரிலுள்ள Pavilion வர்த்தக மையத்தின் கூரைப் பகுதியில் தொங்கிய நிலையில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் ஒன்று கீழே விழுந்ததில் சிங்கப்பூரைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவர் தலையில் காயம் அடைந்தார். தம்மை தனது கணவர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும், அப்போது அந்த கிறிஸ்துமஸ் மரம் விழுந்த இடத்திற்கு அருகே தங்களது குழந்தையும் இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட ஆடவரின் மனைவி 39 வயது அலன் தான் தெரிவித்தார். தமது கணவர் 44 வயது ஜூலியஸ் லீ எங்களது புகைப்படத்தை எடுப்பதற்காக “Merry Go”-வை சுற்றி நின்றுக்கொண்டிருந்தபோது திடீரென கிறிஸ்துமஸ் மரம் அவர் மீது விழுந்தது. இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானோம். இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என அலன் தான் கூறினார்.
நல்ல வேளையாக குழந்தை என்னிடமிருந்தது இல்லையென்றால் குழந்தையும் காயம் அடைந்திருக்கும் என அவர் தெரிவித்தார். என் கணவரின் தலையில் வீக்கம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வர்த்தக மையத்தின் நிர்வாகம் என் கணவரை அருகேயுள்ள கிளினிக்கிற்கு கொண்டுச் சென்றது என்றார் Allen Tan.
இதனிடையே இச்சம்பவம் குறித்து Pavilion KL வர்த்த மையம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு பெருநாளுக்கான அனைத்து அலங்கரிப்புகளையும் பரிசோதிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளது.