சிரம்பான், ஜூன் 12 – நெகிரி செம்பிலான், சிரம்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்றின் இயக்குனர், இல்லாத ஆன்லைன் முதலீட்டி மோசடியை நம்பி, பத்து லட்சத்துக்கும் கூடுதலான பணத்தை பறிகொடுத்துள்ளார்.
வாட்ஸ்அப் செயலி மூலமாக அறிமுகமான நபரை நம்பி, அவர் தனது சொந்த பணத்தோடு, நிறுவனத்தின் பணத்தையும் கொடுத்து ஏமாந்ததாக கூறப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பில், நேற்று அவ்வாடவரிடமிருந்து புகார் பெறப்பட்டதை, சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் ஹத்தா சே டின் (Mogamad Hatta Che Din) உறுதிப்படுத்தினார்.
வாட்ஸ்அப் வாயிலாக அறிமுகமான நபரை நம்பி, கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28-ஆம் தேதி வரை, அவர் 16 பணமாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனால், அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாக ஹத்தா சொன்னார்.
இதனிடையே, இவ்வாண்டு ஜனவரி முதல் நேற்று வரை, அதே போல இல்லாத ஆன்லைன் முதலீட்டு திட்ட மோசடி சம்பவங்கள் தொடர்பில், சிரம்பான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை, இதுவரை RM4.3 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய 55 விசாரணை அறிக்கைகளை திறந்துள்ளதையும் ஹத்தா சுட்டிக்காட்டினார்.
அதே காலகட்டத்தில், அந்த மோசடிகள் தொடர்பில், 23 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.