
புது டெல்லி, மே-8-அண்மைய ஆண்டுகளில் இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வியூக ரீதியிலான நடவடிக்கைகளில் ஒன்றான ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) இராணுவ நடவடிக்கைக் குறித்த ஆவணப்படத்தை, இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
Operation Sindoor என்பது, 2025 மே மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய இராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய துல்லியமான ஏவுகணைத் தாக்குதல் ஆகும்.
அதன் ஓராண்டு நிறைவை ஒட்டி ஜெய்ப்பூரில் இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட இந்த ஆவணப்படம், உண்மையான வீடியோ காட்சிகள், நிபுணர்களின் பேட்டிகள் மற்றும் அந்தச் சம்பவங்களின் மறு உருவாக்கம் ஆகியவற்றின் மூலம் மிகத் துல்லியமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
தேசத்தின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த இரகசிய நடவடிக்கையின் பின்னணியில் இருந்த சவால்கள் மற்றும் துணிச்சலை இந்தத் திரைப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஒரு கடினமான சூழலில், நாட்டின் நலனைப் பாதுகாக்க பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நுணுக்கமான திட்டமிடல்களை இந்தப் படம் விவரிக்கிறது.
இந்தியாவின் பாதுகாப்புத் திறனை உலகிற்குப் பறைசாற்றும் வகையிலும், வரலாற்றைப் பதிவுச் செய்யும் வகையிலும் இந்த ஆவணப்படம் அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மக்களிடையே தேசியப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், வீரர்களின் தியாகத்தைப் போற்றும் உணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் படம் வெளியிடப்பட்டுள்ளது.
தற்பொழுது பொது மக்களின் பார்வைக்குக் கிடைத்துள்ள இந்த ஆவணப்படம், நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.



