பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 9 – வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், அவசரமாக பயணித்த ஆம்புலன்ஸ் ஒன்றை மிகவும் நெருக்கமாக பின் தொடர்ந்த, அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் பயணித்ததாக கூறப்படும் வீடமைப்பு ஊராட்சி அமைச்சர் ங்கா கோர் மிங், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தாம் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
தாம் ஒருபோதும் சட்டத்தை மீறி நடக்க எண்ணியதில்லை என குறிப்பிட்ட கோர் மிங், மீட்பு பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி வருவதாகவும் கூறியுள்ளார்.
இம்மாதம் இரண்டாம் தேதி, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், ஏழு வாகனங்களை உட்படுத்திய கோர விபத்தின் போது அச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது, பேராக், ஈப்போவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுக் கொண்டிருந்த கோர் மிங்கின் வாகனத்திற்கு பின்னால், தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று வந்ததாகவும், அதற்கு இடம் கொடுத்து தனது ஓட்டுனர் விலகியதாகவும் அமைச்சர் சொன்னார்.
எனினும், மோசமான நெரிசல் காரணமாக வேறு வழியின்றி அந்த ஆம்புலன்சை பின்னர் பின் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“அது வேண்டுமென்றே செய்யப்பட்டது அல்ல. அதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்” என கோர் மிங் கூறியுள்ளார்.