ஆயர் தாவார், , டிச 4 – ஆயர் தாவார் தோட்ட தமிழ்ப் பள்ளிக்கு சொந்தமாக 300,000 ரிங்கிட் செலவில் 2 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளி இருந்து வரும் நிலத்தின் உரிமையாளரிடம் அந்த நிலம் வாங்கப்பட்டது.
இந்த நிலத்திற்காக மூன்று லட்சம் ரிங்கிட்டுக்கான காசோலையும் அண்மையில் நில உரிமையாளரிடம் பள்ளியின் மேலாளர் வாரியம் வழங்கியது. இந்த நிலத்திற்கான கொள்முதல் உடன்பாட்டை Beruas நாடாளுமன்ற உறுப்பினர் Ngeh Koo Ham இலவசமாக செய்து கொடுப்பதற்கு முன்வந்தார்.
பள்ளி மேலாளர் வாரியம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடு பொதுமக்களிடம் இருந்து பெற்ற நன்கொடை மூலம் மூன்று லட்சம் ரிங்கிட் திரட்டி அந்த பணம், நில உரிமையாளரிட ம் வெற்றிகரமாக ஒப்படைக்கப்பட்டதாக Air Tawar தோட்ட தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவரும், ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை ஆசிரியரும், பள்ளி மேலாளர் வாரியக் குழு தலைவருமான Manaharan Pydi தெரிவித்தார்.
1938-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட Air Tawar தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு சொந்த நிலம் வாங்கும் முயற்சிக்கு சில தனிப்பட்டவர்களும் நன்கொடை கொடுத்துள்ளனர்.
பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான சிவநேசன் மாநில அரசாங்கத்தின் மானியமாக 20,000 ரிங்கிட்டும், பேரா மாநில இந்திய மேம்பாட்டு அறவாரியம் 15,000 ரிங்கிட்டும், தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 10,000 ரிங்கிட்டும் வழங்கியுள்ளனர்.
மேலும் பொதுமக்களும் பள்ளிக்கு நிலம் வாங்கும் திட்டத்திற்கு தங்களால் முடிந்த நன்கொடை வழங்கியதாக Manaharan தெரிவித்தார். அதோடு Air Tawar தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு திடலை மேம்படுத்தும் திட்டத்திற்கு Beruas நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ Ngeh Koo Ham 50,000 ரிங்கிட் மானியம் வழங்கியுள்ளார்.
மேலும், மனித வள அமைச்சரும் Batu Gajah நாடாளுமன்ற உறுப்பினருமான வி. சிவகுமார் இப்பள்ளிக்கு புதிய வேலி மற்றும் சுவர் அமைக்கும் திட்டத்திற்கு ஒரு லட்சம் ரிங்கிட் மானியம் வழங்குவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார் என மனஹரன் தெரிவித்தார். இந்த வேளையில் தம்முடன் பள்ளி மேலாளர் வாரியர் குழுவில் இடம்பெற்று நிதி திரட்டும் முயற்சிக்கு பாடுபட்ட அனைவருக்கும் அவர் தமது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.