
குவாந்தான், ஜூன் 10 – நேற்று, குவாந்தான் பெரா சுங்கை ட்ரியாங் ஆற்றங்கரையில், மீன் பிடித்து கொண்டிருந்த கணவருக்காக காரில் 4 மாத குழந்தையுடன் காத்திருந்த பெண் ஒருவர், நீரோட்டத்தில் அடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த பெண் அமர்ந்திருந்த பெரோடுவா பெஸ்ஸா வாகனம் திடீரென்று, முன்னோக்கி நகர்ந்து அருகில் உள்ள ஆற்றில் விழுந்தபோது, அப்பெண் காரிலிருந்து இறங்கி வந்து தன்னுடைய 4 மாத குழந்தையை தன் கணவரிடம் ஒப்படைத்துள்ளாரென்று பெரா காவல்துறைத் தலைவர், சுல்கிஃப்லி நசீர் தெரிவித்துள்ளார்.
பின்னர்தான், ஆற்று நீரோட்டத்தில் 31 வயதான சகிரா அகோப் பரிதாபமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரிகள் அப்பெண்மணியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், மழை காரணமாக தேடும் பணி இன்று மாலை ஒத்திவைக்கப்பட்டுள்ளதென்றும் அறியப்படுகின்றது.