
புத்ராஜெயா, ஜூன்-2-இணையத்தில் சட்டவிரோதமாக வேப் எனப்படும் மின்-சிகரெட் பொருட்களை விற்பனை செய்த 4 இணையத் தளங்களை முடக்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
பொது சுகாதாரத்திற்கான புகையிலை பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறி, வேப் பொருட்களை விளம்பரம் செய்து இணையத்தில் விற்பனை செய்த குற்றத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக புகார்கள் மூலம் கண்டறியப்பட்ட 10 இணையத் தளங்களில், இந்த 4 தளங்களை உடனடியாக முடக்குமாறு, MCMC எனப்படும் மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள 6 தளங்கள் மீது தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில், “காளான் சுவை” கொண்ட போதை வேப் பயன்படுத்திய சிறுமி ஒருவர், தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்ட கொடூர சம்பவத்தை அடுத்து, இத்தகைய ஆபத்தான போதைப் பொருட்கள் இணையம் வழியாகக் குழந்தைகளுக்கு எளிதில் கிடைப்பதைத் தடுக்க அரசாங்கம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.
சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என KKM அமைச்சு எச்சரித்தது.



