
தாப்பா, ஜூன்-2-பேராக், தாப்பாவில் உள்ள கூனோங் பத்து பூத்தே மலையில் காணாமல் போன 49 வயது மலையேறி ஜாஸ்லிண்டா சாலுடினைத் (Jaslinda Saludin) தேடும் பணியில் உள்ளூர் ஓராங் அஸ்லி பழங்குடியின மக்கள் 12 பேர் களமிறங்கியுள்ளனர்.
மே 23-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு 14 மலையேறிகள் மற்றும் 2 வழிகாட்டிகளுடன் பயணத்தைத் தொடங்கிய ஜஸ்லிண்டா, ஆரம்பத்தில் உடல்நலக் குறைவால் பாதையில் நிறுத்தப்பட்டார்.
இருப்பினும், பின்னர் சிகரத்தை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்த அவர், மறுநாள் காலை 7.30 மணியளவில் மலை வழிகாட்டியால் கடைசியாகப் பார்க்கப்பட்டார்.
அதிலிருந்து காணாமல் போயுள்ள ஜாஸ்லிண்டாவைத் தேடும் பணி நேற்றோடு 9-ஆவது நாளாக தீவிரமடைந்துள்ளது.
காடுகளின் நிலப்பரப்பு மற்றும் பாதைகள் குறித்து நன்கு அறிந்த Kampung Ampang Woh பகுதியைச் சேர்ந்த ஓராங் அஸ்லி மக்கள், மீட்புக் குழுவினருடன் இணைந்து காட்டுப் பாதைகளுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை விரிவுபடுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், தேடுதல் பகுதியில் சிறுத்தை போன்ற ஆபத்தான வனவிலங்குகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டதாலும், மோசமான தொலைத்தொடர்பு சமிக்ஞை காரணமாகவும் இந்த மீட்புப் பணி கடும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
எனினும், கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் தேடுதல் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.



