ஜோகூர் பாரு, ஜன 30 – இல்லாத ஆன்லைன் முதலீட்டால் கணக்காய்வாளர் ஒருவர் 10 லட்சம் ரிங்கிட்டிற்கும் கூடுதலான தொகையை இழந்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் சமூக ஊடகங்களில் விளம்பரம் வெளியானதை தொடர்ந்து 42 வயதான நபர், “Play Store”-ரில் “Fedelity Max” செயலியை பதிவிறக்கம் செய்ததாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் எம். குமார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வாட்ஸ்அப் மூலம் அவர் ஒரு நபருடன் தொடர்பு கொண்டு நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நிறுவன பங்குகளை எவ்வாறு வாங்குவது என்பது குறித்த உதவிக்குறிப்புகளையும் தெரிந்துகொண்டார்.
அதன் பிறகு அந்த கணக்காய்வாளர் கடந்த அக்டோபர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கிடையே சில வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை பட்டுவாடா செய்துள்ளார். அவர் மொத்தம் 1.34 மில்லியன் ரிங்கிட்டை செலுத்தியுள்ளார்.
தமது முதலீட்டிற்கு அதிக வருமானம் கிடைத்ததை கண்ட அவர் அப்பணத்தை மீட்டுக்கொள்ள முயன்றபோது 2,000 ரிங்கிட்டை மட்டுமே பெற்றார். பணத்தை திரும்பப் பெறுவதற்கு மற்றொரு தொகையைச் செலுத்தச் சொன்ன பிறகுதான் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அந்த ஆடவர் இது குறித்து போலீசில் புகார் செய்தார் என கமிஷனர் குமார் தெரிவித்தார்.