கிள்ளான், டிசம்பர் 11 – ஆட்டிசம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஜெய்ன் ரய்யான் கொலை தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில், டமான்சாரா, இடமான் அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில வாகனங்களின், “டாஷ்கேம்” வீடியோ பதிவுகள் போலீசுக்கு கிடைத்துள்ளது.
அந்த கொலை தொடர்பில், புதிய தடயங்களைப் பெறுவதற்காக, தமது தரப்பு அந்த டாஷ்கேம் பதிவுகளை முழுமையாக ஆராய்ந்து வருவதாக, சிலங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் தெரிவித்தார்.
டாஷ்காம் பதிவுகள் நீளமாக இருக்கும் என்பதால், அவற்றை முழுமையாக ஆராய சற்று கால அவகாசம் பிடிப்பதாக, ஒமார் கான் சொன்னார்.
ஜெய்ன் உடல், இடமான் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகிலுள்ள, நீர்த்தேக்கத்திற்கு அருகில் கடந்த புதன்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டது.
காலையில், அவ்விடத்தை போலீஸ் சோதனையிட்ட போது, ஜெய்னின் உடல் அங்கு இல்லை. எனவே, புதன்கிழமை மாலை, மழை பெய்து கொண்டிருந்த போது தான், அந்த சடலம் அங்கு கொண்டு போய் போடப்பட்டிருக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்.
அதற்கு, கொலையாளி இடமான் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள, இரகசிய பாதைகளை பயன்படுத்தி இருக்கலாம் என போலீஸ் சந்தேகிப்பது குறிப்பிடத்தக்கது.