கோலாலம்பூர், ஜன 23 – இந்திய சமூகம் மலேசியாவிற்கு விசுவாசமாக இல்லை, ஏனெனில் அவர்கள் பிறந்த நாட்டோடு இன்னும் பிணைக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறியிருந்தது தொடர்பில் அவரிடம் போலீசார் இன்று வாக்குமூலம் பெறவிருக்கின்றனர். இன்று காலை 11 மணிக்கு யாயாசன் கெபிம்பினன் பெர்டானாவில் மகாதீரிடம் புக்கிட் அமான் போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்வார்கள், அதுதான் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்று யாயாசன் கெபிம்பினன் பெர்டானா அறநிறுவனத்தை சேர்ந்தவர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாதீரின் வழக்கறிஞர் ரபீக் ரஷீட்டும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்மையில் இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த தந்தி டிவி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்க்காணலில் மலேசியாவிலுள்ள இந்தியர்கள் இந்நாட்டிற்கு விசுவசாசமாக இல்லையென்று மகாதீர் கூறியிருந்தார். மலேசியாவில் உள்ள இந்தியர்கள் தங்களை குடியேறியவர்கள் என்பதைவிட மலேசியர்கள் என்பதை முதலில் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்தியர்களின் விசுவாசம் குறித்து மகாதீர் கேள்வி எழுப்பியிருந்ததைத் தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ S. A விக்னேஸ்வரன் உட்பட பல தரப்பினர் டாக்டர் மகாதீருக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.