
புது டெல்லி, ஆகஸ்ட்.05- இந்தியாவில் கடந்த மாதம் முதல் பெய்து வரும் பருவமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ள நீர் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பருவமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வடகிழக்கு மாநிலமான அசாமும் அடங்கும். அங்கு குறைந்தது 87 பேர் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகள் இன்னும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. மீட்புப் பணிகளுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும் நிதி உதவிகளை வழங்குமாறு மாநில அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கேரளாவில், தொடர்ந்து பல நாட்களாகப் பெய்த கனமழையால் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 7 பேரைக் காணவில்லை எனவும் கூறப்படுகிறது.
கனமழையால் நிலச்சரிவுகள் நிகழ்ந்ததாலும், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாலும் 10,000-க்கும் மேற்பட்ட மக்களுக்குப் புகலிடம் அளிக்க 300-க்கும் மேற்பட்ட தற்காலிக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் பல பகுதிகளில் நிலவும் கடும் கோடைக் காலத்தின் போது தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சி நிலை காணப்படும். அதன் பிறகு, பருவமழை தொடர்பான பேரிடர்கள் அங்கு நிகழ்வது வழக்கமாக இருக்கிறது.
வருடாந்திர பருவமழை விவசாயத்திற்கு மிகவும் அவசியமானதாக இருந்தாலும், காலநிலை மாற்றம் காரணமாக தெற்காசியா முழுவதும் இந்நிலை சீரற்றதாகவும், கணிக்க முடியாததாகவும், ஆபத்தானதாகவும் மாறி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.



