சுங்கைப் பட்டாணி , மார்ச் 24 – ம.இ.கா மற்றும் மக்கள் சக்தி கட்சிக்கிடையிலான தொடர்பு மேலும் வலுவடையும் என்பதோடு இதன்வழி இந்திய சமூகத்தை மேலும் முன்னேற்ற பாதைக்கு கொண்டுச் செல்லும் முயற்சியையும் தீவிரப்படுத்த முடியும் என ம.இ,காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ S.A விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். சுங்கைப் பட்டாணி Cinta Sayang உல்லாச விடுதியில் டத்தோஸ்ரீ தனேந்திரன் தலைமையிலான மக்கள் சக்தி கட்சியின் கலந்துரைடயாடல் கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு தாம் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் விக்னேஸ்வரன் கூறினார். இந்த அழைப்பு தம்மை நெகிழச் செய்திருப்பதோடு இரு கட்சிகளுக்கிடையிலான நமது தொடர்பு மேலும் அணுக்கமாகும் என்பதோடு இதன் மூலம் இந்திய சமூகத்தை மேலும் முன்னேற்றப் பாதைக்கான திட்டங்களை எடுத்துச் செல்ல முடியும் என அவர் தெரிவித்தார்.
இந்தியர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும் சமூகத்தின் ஒன்றுமை மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இத்தகைய கலந்துரையாடல் விவேகமான செயல் திட்டங்களில் ஒன்றாக அமையும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லையென விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இதனிடையே சத்தி அறநிறுவனம் மற்றும் அருள்மிகு சிவலிங்கேஸ்வரர் கோவிலின் ஏற்பாட்டில் சுங்கைப் பட்டாணி, Taman Tunku Haminah வில் நேற்று மாலை நடைபெற்ற மாமன்னர் மாவீரன் ராஜேந்திர சோழனின் சிலை திறப்பு விழாவில் ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் உள்ளூர் மக்களும் திரளாக கலந்துகொண்டு சிறபித்தது குறித்து மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் தமது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார். தென் கிழக்காசியாவில் ராஜேந்திர சோழனின் பெருமையையும் வரலாற்றுப்பூர்வமான சாதனைகளையும் புகழையும் நினைத்துப் பார்ப்பதற்கு இநத நிகழ்வு ஒரு வாய்ப்பாக அமைந்தாக அவர் சுட்டிக்காட்டினார்.