
புத்ராஜெயா, ஜூன்-18 – NFC எனப்படும் தேசிய ஃபீட்லோட் கழகம் மற்றும் அதன் 3 துணை நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை பொது மக்களுக்கு வெளியிட்டு இரகசியத்தன்மையை மீறியதற்காக, பப்ளிக் வங்கி 90 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மலாயா தலைமை நீதிபதி ஹஸ்னா ஹாஷிம் தலைமையிலான மூவரடங்கிய கூட்டரசு நீதிமன்ற அமர்வு, இன்று அத்தீர்ப்பை வழங்கியது.
சமமான, முன்மாதிரியான மற்றும் மோசமான இழப்பீடு ஆகியவற்றுக்கு தலா 30 மில்லியன் என்ற கணக்கில், அந்த 90 மில்லியன் ரிங்கிட் நிர்ணயிக்கப்பட்டது.
இழப்பீடு முழுமையாகச் செலுத்தப்படும் வரை இன்று முதல் பப்ளிக் வங்கி மொத்தத் தொகையில் 2% வட்டியை செலுத்த வேண்டும் என்றும் நிதிபதி அறிவித்தார்.
இவ்வழக்கில் பப்ளிக் வங்கி செய்திருந்த மேல்முறையீட்டை நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
NFC தனது இழப்புகளை நிரூபிக்கத் தவறியதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக தீர்ப்பளித்து 10,000 ரிங்கிட் செலவுத் தொகையைச் செலுத்துமாறும் அறிவித்தது.
எனினும், மேல்முறையீட்டு நீதிமன்றம் அதன் தீர்ப்பில் தவறிழைத்ததாக இன்றையத் தீர்ப்பில் ஹஸ்னா கூறினார்.
கால்நடை வளர்ப்புத் திட்டமான NFC, அரசாங்கத்திடம் பெற்ற கடனில் சொத்து வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் வகையில், 2012-ஆம் ஆண்டு பி.கே.ஆர் கட்சியின் அப்போதைய உதவித் தலைவரான ரஃபிசி ரம்லி, இரகசிய வங்கி விவரங்களைப் பெற்றபோது இவ்வழக்குத் தொடங்கியது நினைவிருக்கலாம்.