கோத்தா கினபாலு, பிப் 2 – இறைச்சிக்காக முதலைகளை கொல்வதில்லை என்றும் மக்கள் நடமாட்டப் பகுதிகளில் மனிதர்களின் உயிருக்கு மிரட்டலை ஏற்படுத்திவரும் முதலைகள்தான் வேட்டையாடி கொல்லப்படுகின்றன என சபா மாநில வனவிலங்குத்துறையின் இயக்குநர் அகஸ்டின் துகா தெரிவித்தார்.
வனவிலங்குத் துறையில் குறைந்த மனிதவளம் இருப்பதால், அரசாங்கத்திடம் அனுமதி பெறுவது உள்ளிட்ட இறைச்சியை விற்பனை செய்வதற்கான செயல்முறை நேர விரயத்தை எடுத்துக்கொள்ளும் செயலாகவும் இருக்கும் என அவர் கூறினார். மனிதர்களுக்கு மிரட்டலை ஏற்படுத்திவரும் முதலைகளை கொல்வதில் தங்கள் கவனம் இருப்பதாகவும், முதலை இறைச்சி விற்பதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.
பாப்பார் மாவட்டத்தில் ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 27 ஆம் தேதி வரை மனிதர்களுக்கு மிரட்டலாக இருந்த முதலைகளை வேட்டையாடி கொல்லும் நடவடிக்கை முடிவடைந்ததாக அகஸ்டின் துகா தெரிவித்தார். அந்த மூன்று நாள் நடவடிக்கையின்போது மொத்தம் 32 முதலைகள் கொல்லப்பட்டன. சுங்கை கவாங் ஆற்றில் 19 முதலைகளும், சுங்கை கினாருட் ஆற்றில் 12 முதலைகளும் சுங்கை பாப்பார் ஆற்றில் ஒரு முதலையும் கொல்லப்பட்டன. சபா மாநிலம் முழுமையிலும் இந்த நடவடிக்கை தொடரும் என அகஸ்டின் துகா விவரித்தார்.