கோலாலம்பூர், டிச 22 – இல்ஹாம் கோபுரம் கட்டிடத்தை அண்மையில் MACC பறிமுதல் செய்ததில் உள்நோக்கம் எதுவும் கிடையாது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். ஒருவர் எப்படிப்பட்ட பின்னணி மற்றும் பதவியில் இருந்தாலும் அவர்களை MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை நடத்த முடியும் என்பதற்கு அந்த 60 அடுக்கு மாடி கட்டிடம் பறிமுதல் செய்யப்பட்டதன் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளதாக அன்வார் கூறினார். ஊழல் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தும் கடமையும் பொறுப்பும் எம்.ஏ.சி.சி யிடம் உள்ளது. எனவே இது குறித்து தேவையற்ற விமர்சனங்கள் தெரிவிக்க வேண்டியதில்லையென அன்வார் கூறினார்.
ஒவ்வொரு முறையும் பிரபலமானவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளும்போது அதற்கு பின்னல் உள்நோக்கம் இருப்பதாக கருதக்கூடாது என அவர் வலியுறுத்தினார். துன் ஆக இருந்தாலும், டான்ஸ்ரீ யாக இருந்தாலும் அனைத்து மக்களிடமும் பாகுபாடு இன்றி விசாரணை நடத்தும் கடமை MACC-க்கு உள்ளது என அவர் கூறினார். உண்மையை கண்டறிவதற்கான வாய்ப்பு MACC-க்கு வழங்கப்பட வேண்டும் என அன்வார் தெரிவித்தார்.