கோலாலம்பூர், நவ 29 – இவ்வாண்டு முடிவடைவதற்கு இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே எஞ்சியிருக்கும் இவ்வேளையில் வர்த்தக குற்றங்களால் ஏற்கனவே 1.9 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்ற விசாரணைத் துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட் யூசுப் தெரிவித்திருக்கிறார். இவ்வாண்டு ஜனவரி முதல் நவம்பர் 26 ஆம் தேதி வரை மொத்தம் 37,651 வர்த்தக குற்றங்கள் தொடர்பில் புகார்கள் பெறப்பட்டதோடு அது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டதாக அவர் கூறினார்.
கடந்த வாரம் மட்டும் நவம்பர் 20ஆம் தேதியிலிருந்து நவம்பர் 26ஆம் தேதிவரை பல்வேறு வர்த்தக குற்றங்கள் தொடர்பில் மொத்தம் 828 விசாரணை தொடங்கப்பட்டது. இவற்றில் 692 புகார்கள் இணைய வாயிலான மோசடி குற்றச்சாட்டு சம்பந்தப்பட்டவை என ரம்லி தெரிவித்தார். இணையம் வாயிலான எந்தவொரு பட்டுவாடாவில் ஈடுபட்டாலும் மிகவும் விழிப்பாக இருக்கும்படி அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.