
இஸ்கண்டார் புத்ரி, ஏப்ரல்-17-இஸ்கண்டார் புத்ரி வட்டாரத்தில் உள்ள இந்திய சமூகத்தின் நலன்களை மேம்படுத்தும் நோக்கில், ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரவின் குமார் கிருஷ்ணசாமி அரசு சாரா அமைப்புகளின் தலைவர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்தினார்.
கோத்தா இஸ்கண்டார் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ Pandak Ahmad-டும் கலந்துகொண்ட இச்சந்திப்பு, அரசு அமைப்புகளுக்கும் சமூக இயக்கங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு தளமாக அமைந்தது.
இஸ்கண்டார் புத்திரி வாழ் இந்திய மக்கள் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சனைகள் குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, ஜோகூர் மாநில அரசு அமல்படுத்தி வரும் நலத்திட்டங்கள், பொருளாதார உதவிகள், தொழில்முனைவோர் வாய்ப்புகள் மற்றும் இளைஞர்-மகளிர் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அரசாங்கத் திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைவதை உறுதிச் செய்ய வேண்டியதன் அவசியத்தை அதன் போது ரவின் குமார் வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பின் மூலம், அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.



