பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 20 – இஸ்ரேல் கொடியை பயன்படுத்தும் கப்பல்களை, இனி நாட்டின் நீரிணைப் பகுதியில் நங்கூரமிட அனுமதிப்பதில்லை, என அரசாங்கம் இன்று தீர்மானித்துள்ளது.
அதே சமயம், இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்கள், மலேசிய துறைமுகங்களில் சரக்குகளை ஏற்றிச் செல்லவும் தடை விதிக்கப்படுவதாக, ஓர் அறிக்கை வாயிலாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அவ்விரு தடைகளும், உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் சொன்னார்.
இஸ்ரேலை தளமாக கொண்ட ZIM கப்பல் நிறுவனம், நாட்டிலுள்ள எந்த ஒரு துறைமுகத்திலும் நிற்கவோ, பயன்படுத்தவோ கூடாது எனும் தடையும் அதில் அடங்கும்.
அந்நிறுவனத்திற்கு எதிராக, போக்குவரத்து அமைச்சு உடனடி தடை உத்தரவை விதிக்குமென பிரதமர் குறிப்பிட்டார்.
அடிப்படை மனிதாபிமான கொள்கைகளை புறக்கணித்து, பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இழைக்கும் கொடுமை மற்றும் படுகொலை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அரசாங்கம் அந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக பிரதமர் சொன்னார்.