கோலாலம்பூர், நவ 8 – தம்மை இஸ்லாத்தின் மிகப்பெரிய எதிரியென சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாகிர் நாயக் கூறியிருப்பது நியாயம் இல்லையென பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி கூறியுள்ளார். வட்டாரம் முழுவதிலும் போராடிவரும் முஸ்லிம்களின் வலுவான ஆதரவாளராக தாம் திகழ்வதாக அவர் தெரிவித்தார். ஆச்சே மற்றும் மிண்டானாவ் மக்களுக்கான அமைதிப் பேச்சுக்களில் அந்த முஸ்லிம் பிரதேசங்களுக்கு தாம் உதவியுள்ளதாகவும் அப்படியிருக்கும்போது இஸ்லாத்தின் எதிரியென தம் மீது எப்படி முத்திரை குத்த முடியும் என ராமசாமி வினவினார். நேற்றிரவு கோலாலம்பூரில் நடைபெற்ற ஒற்றுமை கூட்டத்தில் வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது ராமசாமி இதனை தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் ஆச்சேவும் பிலிப்பைன்சில் மிண்டானாவும் தன்னாட்சியுரிமை பெறுவதற்கு தாம் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியிருப்பதாகவும் அவர் கூறினார். நைஜிரியாவில் சனிக்கிழமையன்று தம்மை இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரியென ஸாகிர் நாயக் கூறியிருப்பதை 14 நாட்களுக்குள் மீட்டுக்கொண்டு மன்னிப்பு கேட்காவிட்டால் அவருக்கு எதிராக தமது வழக்கறிஞர்கள் அவதூறு வழக்கை தாக்கல் செய்வார்கள் என்றும் ராமசாமி தெரிவித்தார்.