ஈப்போ, ஜனவரி 29 – 16 வயது மாணவியை காரில் வைத்து கற்பழித்ததாக சந்தேகிக்கப்படும், போலீஸ் “சார்ஜென்ட்” ஒருவர் நேற்று கைதுச் செய்யப்பட்டார்.
42 வயதான, பேராக் தெங்ஙா மாவட்டத்தில் பணிப்புரியும் அந்த சந்தேக நபர், விசாரணைக்கு உதவும் பொருட்டு, இம்மாதம் 31-ஆம் தேதி வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.
அந்நபர் போலீஸ் அதிகாரியாக இருந்தாலும், எந்த ஒரு பாராபட்சமும் இன்றி, அவருக்கு எதிராக வெளிப்படையான, துல்லிய விசாரணை மேற்கொள்ளப்படுமென யுஸ்ரி உத்தரவாதம் அளித்தார்.
முன்னதாக, கடந்தாண்டு ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில், பேராக் தெங்ஙா மாவட்டத்திலுள்ள, போலீஸ் நிலையம் மற்றும் பேரங்காடிக்கு முன்புறம் காரில் வைத்து, 16 வயது மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், அண்மையில் தான், பாதிக்கப்பட்ட அம்மாணவி, அது குறித்து தனது தாயிடம் கூறியதை தொடர்ந்து, அந்த சார்ஜென்ட்னின் அந்த இழிவான செயல் அம்பலமானது.
அச்சம்பவம் குறித்து, வாக்குமூலம் அழிக்க பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது பெற்றோரும் பேராக் தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதையும் யுஸ்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.